
கோலாலம்பூர், ஜூன் 17: தமிழர் பாரம்பரியத்தின் ஒளிவிளக்காக திகழும் திரௌபதி மேடை நாடகம், வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி மலேசியக் கலைஞர்களும், தமிழகத்திலிருந்து வரும் மேடை பிரபலங்களும் இணைந்து அரங்கேற்கவுள்ளார்கள். இந்த நாடகம் புனிதமாகவும், பண்பாட்டு விழிப்புணர்வையும் வளர்க்கும் முயற்சியாகவே காணப்படுகிறது.

பாரதி தமிழ் மன்றம், லைஷா கலை அகாடமி, கோமல் தியேட்டர் மற்றும் மைஃபேம் குழுமம் இணைந்து மிகுந்த முயற்சியுடன் ஏற்பாடு செய்யும் இந்த நாடகம், பிரிக்ஃபீல்ட்ஸ் டெம்பிளா பைனான்ஸ் மண்டபத்தில் மாலை 6.30 மணிக்கு நடைபெறும்.
நாடகத்தின் தயாரிப்பாளர்கள் தெரிவித்ததாவது, இது சாதாரண மேடை நாடகம் அல்ல; மாபெரும் தயாரிப்புச் செலவில், சினிமாவிற்கே ஏற்ற அணிகலன்கள் மற்றும் ஒளிப்பட அமைப்புகளுடன் நடத்தப்படும் சிறப்பான ஒரு கலை நிகழ்வாக இருக்கும் என்று தெரிவித்தனர்.
இந்த இத்திகாசக் கதை, பாரதத்தின் வீர பெண்மையின் சின்னமாக விளங்கும் திரௌபதி வாழ்க்கையை மையமாகக் கொண்டதாகும். நம் பிள்ளைகள், இளைஞர்கள், மற்றும் பெற்றோர்கள் இப்படியான நிகழ்வுகளை அனுபவித்து பாரம்பரிய கலை மீது காதல் கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குவதே இதன் நோக்கம்.

“நாடகமே பலருக்கு கதாநாயகனாக ஆக வழிவகுத்தது; அந்த மேடை மீண்டும் உயிர்ப்பட வேண்டும்,” என மக்கள் கலைஞர் கவிமாறன் தெரிவித்தார்.
டிக்கெட் விற்பனை ஏற்கனவே தீவிரமாக நடைபெற்று வருவதால், ஆர்வமுள்ளோர் தாமதிக்காமல் முன்பதிவு செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
-ஸ்ரீதரன்



