
கோலாலம்பூர், 27 மே: கோலாலம்பூரின் ஜாலான் சைட் புத்ராவில் அமைந்த குயென் செங் இடைநிலைப்பள்ளி மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திலா லக் ஷ்மன் ஏற்பாடு செய்த ‘ஜனனம் 5.0’ விழா, ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்களும் தனித்திறமைகளுடன் வாழ்கின்றனர் என்பதைக் காட்டும் முக்கியமான நிகழ்வாக அமைந்தது.
திலா லஷ்மன் தலைமையில் ஐந்தாவது முறையாக நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சி, அவரது கனவையும் கடின முயற்சியையும் பிரதிபலித்தது. ஆட்டிசம் நட்சத்திரங்கள் விவேன் குமார், லக்ஷனா, மற்றும் அய்டலின் ஆகியோரின் இசை நிகழ்வுகள் நிகழ்ச்சியை பிரம்மாண்டமாகத் தொடங்கின.
இசையமைப்பாளர் ஜே இசையை வழங்க, சிங்கப்பூரை சேர்ந்த விக்னேஸ்வரி வடிவழகனின் வருகையும், திலா-குகேந்திரன்-சஞ்சேவ் பாடிய ‘மந்திரம் வச்சேனே’ எனும் பாடலும், நிகழ்ச்சியின் பன்முகச் சிறப்பை வெளிப்படுத்தின.
1330 திருக்குறள்களை இசையாக்கும் ‘குரலிசை காவியம்’ திட்டத்தில் சஞ்சேவின் குரலும் இடம்பெறும் என திலா அறிவித்ததோடு, நிகழ்ச்சியின் போஸ்டர் பிரதமர் மற்றும் துணை பிரதமரின் பிரதிநிதிகளால் தொடக்கி வைக்கப்பட்டது.
அனில் ஷத்ரியன் இயக்கிய நாடகம், ஆட்டிசம் பிள்ளைகளைக் கொண்ட பெற்றோர் எதிர்நோக்கும் உண்மையான போராட்டங்களை உணர்வுபூர்வமாக காட்டியது.
மக்களின் புரிதலை உருவாக்கும் ஜனனம் நிகழ்ச்சி, ‘மனிதமாய் அரவணைப்பு’ எனும் உணர்வை தூண்டிய அர்த்தமுள்ள விழாவாக இருந்தது.
-யாழினி வீரா



