
Picture: Facebook
கரூர் வேலுசாமிபுரத்தில், தமிழக வெற்றி கழக (TVK) தலைவர் மற்றும் நடிகர் விஜய் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசலால் பெரும் தள்ளுமுள்ளி ஏற்பட்டது. இதில் குறைந்தது 39 பேர் உயிரிழந்ததுடன், 80 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
காலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் நெரிசலாகக் கூடியிருந்த நிலையில், விஜயின் வாகனம் வரும்போது பரபரப்பு ஏற்பட்டது. இடம் பற்றாக்குறை காரணமாக மக்கள் தள்ளாடி விழ, சிலர் மயக்கம் அடைந்தனர். விஜய் உடனே உரையை நிறுத்தி தண்ணீர் பாட்டில்களை வழங்கி, ஆம்புலன்ஸ் அழைக்குமாறு கேட்டுக் கொண்டார்.
காயமடைந்தோர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ₹10 லட்சமும், காயமடைந்தோருக்கு ₹1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜகதீசன் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மலேசியா – Y.B. Tuan Papparaidu A/L Veraman தனது “Facebook” பதிவில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இதயபூர்வமான இரங்கலைத் தெரிவித்ததுடன், துயரத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆறுதலும் தைரியமும் கிடைக்க இறைவனைப் பிரார்த்தித்துள்ளார். மேலும், இனி இத்தகைய துயரங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில், பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளும் திட்டமிடலும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர், “உயிரிழந்தோர் ஆன்மாக்கள் சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். குடும்பத்தினர் இந்த கடினமான தருணத்தில் மன உறுதியுடன் நிற்க இறைவன் அருள்புரிவாராக,” என தனது பதிவில் தெரிவித்தார்.



