
சுங்கை பெட்டானி, 6 ஜூலை: கடந்த சனிக்கிழமையன்று பண்டார் புத்தேரி ஜாயாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் கையிலாக இருந்த துப்பாக்கி மற்றும் வன்முறை செயல்கள் தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கெடாவின் கோலா முடா மாவட்ட காவல் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவட்ட காவல் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் கூறுகையில், “கைதான பெண் தனது இருபதுகளின் தொடக்க வயதிலிருந்தவர். சம்பவ இடத்துக்கு அருகிலுள்ள வாடகை வீட்டில் கைது செய்யப்பட்டார்,” என்றார்.
அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, போலீசார் ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இது பல்வேறு குற்றச்செயல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது. தற்போது அந்த பெண் ஜூலை 12 வரை ஏழு நாட்கள் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், 34 வயதான ஒரு நபர், போலீசாரிடம் சரணடைய மறுத்ததோடு, துப்பாக்கி எடுத்து தாக்க முயற்சி செய்தபோது சுட்டு கொல்லப்பட்டார். அவர் மீது 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பந்தப் பதிவு இருப்பதும், அவர் ஜிட்ரா பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சம்பவத்துடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கையாகக் காணப்படுகிறது.
-யாழினி வீரா



