
கோத்தா கினபாலு, மே 8: சபா மாநிலத்தில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் இன்று காலை வரையில் சலாகொன் பகுதியில் அமைந்துள்ள நிரந்தர நிவாரண மையத்தில் (PPK) தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
சபா மாநில பேரிடர் மேலாண்மை குழு செயலாளரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 3ஆம் தேதி திறக்கப்பட்ட இந்த நிவாரண மையம் தற்போது வரை செயல்பாட்டில் இருப்பதாகவும், போஃபோர்ட் மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்கள் இன்னும் வெள்ள பாதிப்புக்குள்ளாகவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மலேசிய வானிலை ஆய்வு மற்றும் அளவியல் துறை இணையதளத்தின் தகவலின்படி, சபா மாநிலத்தின் பல பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய மழை ஏற்படக்கூடும். பிற்பகலில் மலைக்குன்றுப் பகுதிகளில் மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது. இரவில் சபாவின் சில உட்பகுதிகளில் மீண்டும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பகுதி வெப்பநிலை 21 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலைத் துறை தெரிவித்துள்ளது.
வெள்ள நிலைமையை மீட்டெடுக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-யாழினி வீரா