
ஷா ஆலம், செப் 19 – வரும் தீபாவளியை முன்னிட்டு சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் ‘ஜோம் ஷாப்பிங்’ இலவச வவுச்சர் திட்டம் இந்த ஆண்டும் சமூக நலனுக்கு வலுசேர்க்கும் வகையில் செயல்படுத்தப்படுவது பெரிதும் பாராட்டத்தக்கது என சிலாங்கூர் பிபிபி தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் உயரிய நோக்கம், வறுமையில் வாழும் குடும்பங்களும் பெருநாள் உற்சவத்தில் புறக்கணிக்கப்படாமல் மகிழ்ச்சி அனுபவிக்க வேண்டும் என்பதுதான் என அவர் குறிப்பிட்டார். மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு தெரிவித்ததாவது, இத்திட்டத்திற்காக RM4.43 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், RM200 மதிப்புடைய மொத்தம் 22,150 வவுச்சர்கள் மாநிலம் முழுவதும் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கு சமமாக வழங்கப்படும். வவுச்சர்கள் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 17 வரை தகுதி பெற்றவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
வவுச்சர் பெற்றவர்கள், தங்கள் தொகுதியில் தெரிவுசெய்யப்பட்ட கடைகளில் தீபாவளிக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்.
இந்த முயற்சி உண்மையில் குடும்பச் செலவுகளை குறைப்பதோடு, சமூக ஒற்றுமையையும், பண்டிகை மகிழ்ச்சியையும் வறியோரின் இல்லங்களுக்குக் கொண்டு வரும் என டாக்டர் சுரேந்திரன் வலியுறுத்தினார். மேலும், உதவி உண்மையில் தேவைப்படும் குடும்பங்களிடம் சென்றடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.
-ஸ்ரீ



