
கோலாலம்பூர், செப் 19 – மலேசியா கால்பந்து லீக் (MFL) இன்று வெளியிட்ட அறிக்கையில், ஸ்ரீ பாஹாங்க் எஃப்.சி., கேடா தருல் அமான் (KDA) எஃப்.சி. மற்றும் பேராக் எஃப்.சி. மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
15ஆம் எம்.எப்.எல். இயக்குநர் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, ஸ்ரீ பாகாங் எஃப்.சி. 2025–2026 பருவத்திலிருந்து ஒரு வருடத்திற்கு எம்.எப்.எல். போட்டிகளில் பங்கேற்க தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், அவர்கள் முன்பே லீக்கில் இருந்து விலகிய முடிவாகும்.
இதேவேளை, கேடா எஃப்.சி. மற்றும் பேராக் எஃப்.சி. தேசிய உரிமம் (Lesen Kebangsaan) பெற முடியாததால், இரண்டு பருவங்களுக்குப் போட்டிகளில் பங்கேற்க இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. தடை காலம் 2025 பருவத்திலிருந்து 2027 வரை அமல்படுத்தப்படும்.
மூன்று அணிகளுக்கும் கூடுதலாக, 2024–2025 பருவம் முடிந்தபின் கிடைக்க வேண்டிய பரிசுத்தொகை மற்றும் நிதி ஆதரவை இழக்கும் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கடந்த ஜூன் மாதம், எம்.எப்.எல். ஸ்ரீ பாஹாங்க் எஃப்.சி. இந்த பருவம் லீக்கில் பங்கேற்காது என உறுதிப்படுத்தியிருந்தது. அதன் விளைவாக, 2025 சூப்பர் லீக் 13 அணிகளுடன் மட்டுமே நடைபெறுகிறது.
-ஸ்ரீ



