Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

உலகளாவிய தொற்றுநோய் ஒப்பந்தத்தின் வரைமுறை ஒப்பந்தம் முடிக்கப்பட்டது – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

PICTURE:AWANI

கோலாலம்பூர்16 ஏப்ரல் 2025: உலகளாவிய தொற்றுநோய்களை எதிர்கொள்ளும் புதிய ஒப்பந்தத்தின் வரைமுறை (டிராஃப்ட்) ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம், எதிர்காலத்தில் மீண்டும் ஏதேனும் உலகளாவிய தொற்றுநோய்கள் (பாண்டமிக்) ஏற்பட்டால், உலக நாடுகள் ஒருங்கிணைந்த முறையில் அதனை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

WHO-வின் இயக்குனர் டெட்ராஸ் அதானோம் கெபிரியேசஸ் இதுகுறித்து கூறும்போது, “நாடுகளிடையே நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, உலகளாவிய ஒப்பந்தத்திற்கு ஒரு வரைவுப் புரிந்துணர்வு உருவாக்கப்பட்டது. இது ஒரு மிக முக்கியமான முன்னேற்றம்,” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா (COVID-19) பாண்டமிக்கின் போது ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு, இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. பல நாடுகள் தடுப்பூசிகளைத் தாமதமாக பெற்றன. சில நாடுகள் அவற்றை கொள்முதல் செய்ய முடியாமல் போராடின. இதுபோன்ற சிக்கல்களை மீண்டும் தவிர்க்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இறுதி ஒப்பந்தம், மே மாதம் நடைபெறும் உலக சுகாதார அசம்பிளியில் (World Health Assembly) சமர்ப்பிக்கப்படும். அப்போது ஒப்புதல் பெற்றால், ஒப்பந்தம் அதிகாரபூர்வமாக அமல்படுத்தப்படும்.

WHO இப்போது உறுப்புநாடுகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு நாடும் தங்களுடைய சட்ட முறைகளுக்கேற்ப இதை ஏற்க வேண்டியுள்ளது.

இந்த ஒப்பந்தம், எதிர்காலத்தில் மனித உயிர்கள் பாதுகாக்கப்படவும், உலகம் முழுவதும் ஆரோக்கியம் சமமான முறையில் கிடைக்கவும் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.

-முல்லை மலர் பொன் மலர் சோழன்

Scroll to Top