
கோலாலம்பூர், 25 அக். – புட்ராஜெயாவில் நடைபெறவுள்ள ASEAN 25 உச்சி மாநாட்டை முன்னிட்டு, அம்பாங் பார்க் பகுதியில் எந்தவொரு பேரணியையோ பொதுக்கூட்டத்தையோ நடத்த அனுமதி இல்லை என மலேசிய அரசுப் போலீஸ் (PDRM) தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, பொருத்தமான மாற்று இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
போலீஸ் விளக்கத்தில் கூறியதாவது, மாநாட்டு நாட்களில் அம்பாங் பார்க் பகுதியில் கூட்டங்கள் நடத்துவது பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்படுத்தக்கூடும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து நெரிசல் மற்றும் பொது ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
மேலும், எந்தவொரு குழுவும் அந்தப் பகுதியில் அனுமதியின்றி கூடுவதை தவிர்க்குமாறு போலீஸ் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் அமைதியையும் ஒழுங்கையும் பேணிக் கொள்ளுமாறு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தெரிவித்ததாவது, பொதுக்கூட்டம் நடத்தும் உரிமை மதிக்கப்படும் என்றாலும், சர்வதேச மாநாடுகள் நடைபெறும் காலங்களில் பாதுகாப்பு முக்கியம் என்பதால், இட மாற்றம் அவசியம் எனவும் கூறியுள்ளது.
– யாழினி வீரா



