
கோலாலம்பூர், 15 பிப்ரவரி — பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012 (Sosma) தொடர்பாக மீளாய்வு செய்ய பிரதமர் அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
அரசு, இந்த சட்டத்தின் சில முக்கிய அம்சங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் பரிசீலித்து வருகிறது. இந்த மீளாய்வின் முக்கிய தகவல்களை விரைவில் நாடாளுமன்றத்தில் வழங்குவார் என உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுஷியான் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.
சோஸ்மா சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் Ong Kian Ming, Khalid Samad, Kasthuri Patto, Noor Amin Ahmad, Maria Chin Abdullah ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இந்த சட்டம் ரத்து செய்யப்படவேண்டும் என அவர்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது, “சோஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் மிக மோசமான அனுபவங்களை எதிர்கொள்கிறார்கள். நீதிமன்ற விசாரணைகளில் தேவையற்ற தாமதங்கள் ஏற்படுகின்றன. எனவே, இந்த சட்டத்தின் அவசியத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.”
2012ஆம் ஆண்டில், நஜிப் ரசாக் தலைமையிலான அரசு Internal Security Act (ISA) சட்டத்தை நீக்கிய பின்னர், அதற்கு மாற்றாக சோஸ்மா சட்டத்தை கொண்டுவந்தது. தற்போதைய அரசாங்கம், இதன் செயல்பாடுகள் தொடர்பாக புதிய மாற்றங்களை கொண்டு வரப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.
-வீரா இளங்கோவன்