
கோலாலம்பூர், மே 25 – செந்தூல் மாவட்டத்திலுள்ள தாமன் இந்தான் பைடூரியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாக்குவாதத்தால், 44 வயதுடைய பாதுகாவலர் ஒருவர் நண்பரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
செந்தூல் மாவட்டக் காவல் தலைவர், உதவி ஆணையர் அக்மட் சுகர்னோ மொஹமட் சாகாரி வெளியிட்ட தகவலின்படி, இந்த சண்டை சம்பந்தமான தகவல் ஞாயிறு இரவு 9.23 மணிக்கு போலீசாருக்கு வந்தது. “நாங்கள் மூன்று நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு வந்தபோது, அந்த நபர் ஏற்கனவே உயிரிழந்திருந்தார்,” என அவர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணையில், மரணமடைந்த நபர் ஒரு கோவிலுக்கு சென்ற பின்னர், கோவில் முன் நண்பர்களுடன் மதுபானம் அருந்திக் கொண்டிருந்ததுடன், அவ்விடத்தில் அவரது நண்பருடன் வாக்குவாதம் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது.
“வாக்குவாதத்திற்குப் பிறகு சந்தேகநபர் அங்கு இருந்து வெளியேறி மீண்டும் வந்து கொலைக்கு உதவிய ஆயுதத்துடன் தாக்கினார்,” எனவும், இது இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளால் ஏற்பட்டது எனவும் போலீஸ் கூறியுள்ளது.
மரணமடைந்த நபரின் உடல், பிரேத பரிசோதனைக்காக கோலாலம்பூர் பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
-யாழினி வீரா



