Tazhal Media – தழல் மீடியா

/ Mar 05, 2026
Latest News
tms

விவசாய ட்ரோன் இயக்குநர்கள் சட்டபூர்வ உரிமம் பெற வேண்டும் – மார்டி அறிவுரை

கோலாலம்பூர், 05 நவ. – மலேசிய வேளாண்மை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (மார்டி) தெரிவித்ததாவது, விவசாயத் துறையில் ட்ரோன் இயக்கும் நபர்கள் அனைவரும் சிவில் விமான ஆணையம் (சிஏஏஎம்) வழங்கும் சட்டபூர்வ இயக்க உரிமத்தை கட்டாயமாகப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மார்டி இயக்குநர் டாக்டர் அக்மத் சஃபுவான் புஜாங் கூறியதாவது, தற்போது ட்ரோன் தொழில்நுட்பம் விவசாய உற்பத்தியில் முக்கிய பங்காற்றி வருகிறது. எனவே, உரம் தெளித்தல், பூச்சி மருந்து பயன்பாடு போன்ற பணிகள் பாதுகாப்பாகவும் விதிமுறைகளுக்கு இணங்கவும் நடைபெறுவது மிக அவசியம் என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, அனுமதியின்றி ட்ரோன் இயக்குவது சட்டத்திற்குப் புறம்பானது. அதனால், ஒவ்வொரு இயக்குநரும் உரிய பயிற்சியுடன் உரிமம் பெற்று செயல்பட்டால், விபத்து அபாயம் குறையும் மற்றும் தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை உயரும் என்றார்.

மார்டி தற்போது “ட்ரோன் விவசாயப் பயணம் 2025” என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமார் 350 பேர் வரை இயக்குநர்களுக்கு இலவச உரிமம் பெறும் வாய்ப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், மேலும் பல இளைஞர்கள் ட்ரோன் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டு விவசாயத்துறையை மேம்படுத்த வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முயற்சி விவசாயத்தில் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தி, நேரமும் செலவும் குறைக்கும் முக்கியமான ஒரு அடியாகக் கருதப்படுகிறது.

-யாழினி வீரா

Scroll to Top