
கோலாலம்பூர், 15 ஜூன் : மலேசிய தகவல் மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC) கைப்பேசி சேவை நிறுவனங்களிடமிருந்து (MNO) பெறும் பயனர் தரவுகள் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம் 2010 (Akta 709)க்கு நேரடியாக முரணாக இருப்பதாக PPP மத்திய தலைவர் டத்தோ டாக்டர். லோகா பாலா மோகன் கூறியுள்ளார்.
அரசின் திட்டமிட்ட யோசனைக்கிணங்க, 2025 முதல் காலாண்டுக்கான பேச்சு பதிவு மற்றும் இணையம் பயன்படுத்தும் தகவல்களை சேகரிக்க MCMC MNO நிறுவனங்களை அழுத்துவது, பயனரின் ஒப்புமை இன்றி தனிப்பட்ட தகவல்களை பகிரும் அபாயகரமான நடவடிக்கை என அவர் விமர்சித்தார்.
இது ஒரு மனநோக்கமுள்ள அரசியல் நடவடிக்கையாகவும், பொதுமக்கள் மீதான நம்பிக்கையை சிதைக்கும் செயல் என்றும் தெரிவித்தார். “Whoscall” வருடாந்தம் வெளியிட்ட அறிக்கையில் 2024ஆம் ஆண்டு மலேசியா ஆசியாவிலேயே அதிகமான தனிப்பட்ட தரவுகள் கசியும் நாடாக காணப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.
அதே அறிக்கையில், 72.5% பயனர்கள் தங்களது தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருப்பதை உணர்ந்ததாகவும், RM1.57 பில்லியன் நஷ்டமாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தகவல் பாதுகாப்பு பற்றிய MCMC-ன் உறுதிமொழிகள் நம்பகமற்றவை எனவும், இத்திட்டத்தை உடனடியாக கைவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென இன்று நடைபெற்ற பிபிபி கட்சியின் மத்திய செயலவை கூட்டதிற்கு பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
-யாழினி வீரா



