
நேபால், 19 செப் – நேபாளத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஓலி, ராணுவ முகாமில் இருந்த தங்குமிடத்தை விட்டு வெளியேறி தற்போது தனியார் இல்லத்தில் குடியேறியுள்ளார்.
செப்டம்பர் 9 ஆம் தேதி, சமூக ஊடக தடைகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் நடவடிக்கைகளை எதிர்த்து ஜென்-ஸி இளைஞர்கள் தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்களும் பாதுகாப்பு படையினரும் இடையே மோதல் வெடித்த நிலையில், அப்போது பதவியில் இருந்த ஓலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் விளைவாக நேபாள அரசு கலைக்கப்பட்டது.
அதன்பின், செப்டம்பர் 12 அன்று முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பதவியேற்றார். இதே நேரத்தில், பக்தாப்பூரில் இருந்த ஓலியின் வீடு மற்றும் அலுவலகம் போராட்டக்காரர்களால் தீவைக்கப்பட்டதால், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் பாதுகாப்பாக ஷிவாப்புரி வனப்பகுதியில் அமைந்த ராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டார்.
அங்கு முன்னாள் பிரதமர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களுடன் ராணுவக் காவலில் தங்கியிருந்த ஓலி, ஒன்பது நாட்கள் கழித்து முகாமை விட்டு வெளியேறியுள்ளார். தற்போது அவர் பக்தாப்பூர் மாவட்டம், குண்டூ பகுதியில் உள்ள தனியார் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர் வசிக்கும் இல்லத்திற்கு பொதுமக்கள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் நேபாள அரசியல் சூழ்நிலையில் புதிய பரிமாணம் உருவாகியுள்ளது.
– ஸ்ரீ



