Tazhal Media – தழல் மீடியா

/ Jul 09, 2026
Latest News
tms

Rantau Panjang – சுங்கை, Golok இரண்டாவது பாலம் கட்டுமானம் விரைவுபடுத்தப்படும் – பிரதமர் Anwar

Picture : Awani

PUTRAJAYA: மலேசியா மற்றும் தாய்லாந்து இடையிலான பொருளாதார ஒத்துழைப்பையும் எல்லை இணைப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், Rantau Panjang – Sungai Golok இடையிலான இரண்டாவது பாலம் கட்டுமானத் திட்டத்தை விரைவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தாய்லாந்து பிரதமர் Anutin Charnvirakul உடனான இருதரப்பு சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், இந்தத் திட்டம் நீண்ட காலமாக முன்மொழியப்பட்டு வந்ததால், இனி தாமதமின்றி நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஒருமித்த முடிவை இரு நாடுகளும் எடுத்துள்ளதாக கூறினார்.

இந்தப் பாலம் கட்டப்பட்டால், Kelantan மட்டுமின்றி Perlis, Kedah மற்றும் Pulau Pinang உள்ளிட்ட வடக்கு மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகள் உருவாகும் என்றும், தாய்லாந்தின் தென்பகுதியுடனான வர்த்தக மற்றும் போக்குவரத்து தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என்றும் அன்வார் தெரிவித்தார்.

மேலும், Rantau Panjang – Sungai Golok இடையிலான இரயில் சேவையை மீண்டும் இயக்குவது குறித்த ஆரம்பகட்ட ஆலோசனைகளும் நடைபெற்றதாக அவர் கூறினார். இந்த முயற்சி, இரு நாடுகளுக்கிடையிலான மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வெளியிடப்பட்ட தகவலின்படி, இந்த இரண்டாவது பாலம் சுமார் 117.3 மீட்டர் நீளத்தில் அமைக்கப்படவுள்ளது. இதன் கட்டுமானச் செலவு RM40.54 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்தச் செலவை மலேசியா மற்றும் தாய்லாந்து அரசுகள் இணைந்து ஏற்கவுள்ளன. திட்டம் 2028ஆம் ஆண்டில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திட்டம் நிறைவேறுவதன் மூலம் எல்லை வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கும் என்று அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவதோடு, எல்லைப் பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்கும் என்றும் பிரதமர் கூறினார்.

Scroll to Top