Tazhal Media – தழல் மீடியா

/ May 26, 2026
Latest News
tms

நாட்டின் எரிபொருள் போதுமான அளவில் உள்ளது, RON95 விலை RM1.99 ஆக தொடரும் – பிரதமர் அன்வார்

Picture : Awani

புக்கிட் மெர்தாஜாம், 26 மே 2026: உலகளாவிய பொருளாதார அச்சுறுத்தல்கள் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்ற சூழ்நிலைகளுக்கு இடையிலும், மலேசியாவின் எரிபொருள் விநியோகம் தற்போது போதுமான அளவில் உள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், உலகளாவிய எண்ணெய் விநியோக சங்கிலியில் சில இடையூறுகள் ஏற்பட்டிருந்தாலும், அது மலேசியாவின் உள்ளக எரிபொருள் தேவையை பாதிக்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் நாட்டில் நிலையாக இருப்பதாகவும், மக்களுக்கு தேவையான அளவு எரிபொருள் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் உறுதி அளித்தார்.

மேலும், RON95 பெட்ரோல் விலை சலுகை முறையில் லிட்டருக்கு RM1.99 ஆக தொடரும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தை குறைக்க அரசாங்கம் உறுதியாக செயல்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

அன்வார் மேலும் கூறுகையில், மலேசியாவுக்கு சில முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் நல்ல தூதரக உறவுகள் உள்ளதால், ஹோர்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்து சீராக நடைபெறுகிறது. இது நாட்டின் எரிபொருள் பாதுகாப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. உலகளாவிய காப்பீட்டு செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்திருந்தாலும், அரசாங்கம் மானியங்களை தொடர்ந்து வழங்கி மக்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், BUDI MADANI போன்ற உதவி திட்டங்கள் மூலம் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் எரிபொருள் நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன், மக்களின் நலனையும் பொருளாதார பாதுகாப்பையும் தொடர்ந்து காக்குவதாகும் என பிரதமர் வலியுறுத்தினார்.

Scroll to Top