
மாரான், 30 மார்ச் – பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பகாங் மாநிலத்தின் மாரான் பகுதியில் அமைந்துள்ள மரத்தாண்டவர் ஆலயத்தில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மக்கள் கலைஞர் கவிமாறன் அழைப்பின் பேரில் கலந்து கொண்டு பக்தர்களுடன் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்டார்.

பங்குனி உத்திரம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் முக்கியமான இந்து திருவிழாக்களில் ஒன்றாகும். மலேசியாவிலும் இதற்கு சிறப்பு இடம் உண்டு. குறிப்பாக மாரானில் உள்ள மரத்தாண்டவர் ஆலயத்தில் ஆண்டுதோறும் இந்த விழா மிகுந்த பக்தி உணர்வுடன் மற்றும் சிறப்பான முறையில் நடத்தப்படுகிறது.

நேற்று நடைபெற்ற பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டனர். ஆலயத்தில் ஆன்மிக சூழல் நிலவிய நிலையில், கவிமாறன் அவர்களின் பங்கேற்பு நிகழ்விற்கு மேலும் சிறப்பை சேர்த்தது.

இந்த திருவிழா தொடர்ந்து பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் நடைபெறும் என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-யாழினி வீரா



