
Picture : Awani
KUALA LUMPUR: Kumpulan Wang Persaraan (Diperbadankan) (KWAP) நிறுவனத்தின் செயல்திறன் முழுமையான பார்வையுடன் நியாயமாக மதிப்பிடப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். ஓய்வூதிய நிதி நிறுவனமான KWAP, RM12.9 பில்லியன் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
Dewan Negara-வில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வில் பேசிய பிரதமர், KWAP பெற்றுள்ள இந்தச் சாதனை, அதன் முதலீட்டு குழு, நிர்வாகம் மற்றும் தலைமைத்துவத்தின் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணர்வு காரணமாக சாத்தியமானது என்றார்.
சமீபத்தில் பேசப்பட்ட eFishery முதலீடு தொடர்பாக கருத்து தெரிவித்த அன்வார் இப்ராஹிம், அந்த நிறுவனத்தில் KWAP மட்டுமின்றி, உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களும் முதலீடு செய்துள்ளதாக குறிப்பிட்டார். Singapore-ஐ சேர்ந்த Temasek, Japan நாட்டின் SoftBank, Sequoia Capital, Aqua-Spark, Abu Dhabi-யை தளமாகக் கொண்ட 42XFund மற்றும் Indonesia-வின் NorthStar போன்ற நிறுவனங்களும் eFishery-யில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே, ஒரு குறிப்பிட்ட முதலீட்டு விவகாரத்தை மட்டும் வைத்து KWAP-ன் ஒட்டுமொத்த செயல்திறனை மதிப்பிடக் கூடாது என்றும், முழுமையான தரவுகள் மற்றும் பின்னணியை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
அதேவேளை, முதலீடுகளில் ஆபத்துகள் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், எந்தவொரு பலவீனமும் இருந்தால் அவை சரிசெய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். பொது நிதி தொடர்பான முதலீடுகளில் அதிக கண்காணிப்பு, பொறுப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை தொடர்ந்து உறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
KWAP-ன் வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாக குறிப்பிட்ட அன்வார் இப்ராஹிம், ஒரு தனிப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் முழு நிறுவனத்தின் பங்களிப்பையும் குறைத்து மதிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்றார். அதே நேரத்தில், முதலீட்டு முடிவுகளில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.



