Tazhal Media – தழல் மீடியா

/ Jul 28, 2026
Latest News
tms

தற்காலிகமாக Tingkatan Enam, KPM-இன் கீழ் தொடரும் – பிரதமர் அன்வார் இப்ராஹிம்

Picture : Awani

PUTRAJAYA: Tingkatan Enam கல்வி முறை தற்காலிகமாக Kementerian Pendidikan Malaysia (KPM)-இன் கீழ் தொடரும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். தற்போதுள்ள நிர்வாக அமைப்பு, ஆசிரியர்களின் சேவைத் திட்டம் மற்றும் செயல்படுத்தல் தொடர்பான பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Kementerian Pendidikan மாதாந்திர ஒன்றுகூடலில் உரையாற்றிய அன்வார் இப்ராஹிம், Tingkatan Enam மாணவர்கள் சாதாரண மேல்நிலைப் பள்ளி மாணவர்களாக அல்லாமல், முன்பல்கலைக்கழக (prauniversiti) மாணவர்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கான தனித்துவமான அடையாளமும், கல்விச் சூழலும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இதற்கு முன்பு Tingkatan Enam கல்வியை Kementerian Pendidikan Tinggi (KPT)-க்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டிருந்தாலும், அதை உடனடியாக நடைமுறைப்படுத்துவது பொருத்தமல்ல என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதைக்கு KPM-இன் கீழ் தொடர்ந்தாலும், எதிர்காலத்தில் அதன் செயல்பாடுகள் மீளாய்வு செய்யப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

மேலும், Tingkatan Enam மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே பயின்றாலும், அவர்களுக்கு தனி கட்டிடம் அல்லது தனித்த நிர்வாக அமைப்பு வழங்கப்பட வேண்டும் என்று அன்வார் கூறினார். இதன் மூலம் Tingkatan Enam-இன் முன்பல்கலைக்கழக அந்தஸ்து மேலும் வலுப்பெற்று, மாணவர்களின் மதிப்பும் கல்வித் தரமும் உயர்த்தப்படும் என்றார்.

ஆசிரியர்களின் பணியமைப்பு, நிர்வாக முறை மற்றும் மாணவர்களின் கல்வித் தேவைகள் ஆகியவை முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பிறகே எதிர்கால மாற்றங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பிரதமர் விளக்கினார். மாற்றம் என்பது மாணவர்களின் நலனையும் கல்வித் தரத்தையும் பாதிக்காத வகையில் படிப்படியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றார்.

அரசாங்கம் Tingkatan Enam கல்வியின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும், முன்பல்கலைக்கழகக் கல்விக்கான முக்கிய பாதையாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

Scroll to Top