
Picture : Awani
KUALA LUMPUR, 11 ஆகஸ்ட் 2026: தபுங் ஹாஜியின் நிர்வாகக் குழு மற்றும் உயர் நிர்வாகப் பதவிகளில் அரசியல்வாதிகள் அல்லது அரசியல் தொடர்புடைய நபர்களை நியமிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin வலியுறுத்தியுள்ளார்.
தபுங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை குறித்து இன்று Dewan Rakyat-இல் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், முதலீட்டு முடிவுகள் மற்றும் வைப்பாளர்களின் நிதி நிர்வாகத்தில் அரசியல் தலையீட்டைத் தவிர்ப்பதற்கு இந்த நடவடிக்கை அவசியம் என்றார்.
தபுங் ஹாஜியின் இயக்குநர்கள் குழு மற்றும் உயர் நிர்வாகப் பதவிகளுக்கான நியமனங்கள் தகுதி, நேர்மை, தொழில்முறை திறன் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என Muhyiddin தெரிவித்தார். குறிப்பாக நிதி, வங்கி, முதலீடு, சட்டம் மற்றும் ஷரியா ஆகிய துறைகளில் பரந்த அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே முக்கிய பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மேலும், தபுங் ஹாஜியின் தலைமைப் பதவிக்கு ஒருவரை நியமிப்பதற்கு முன், அவரின் தகுதி மற்றும் நேர்மையை மதிப்பிடும் “fit and proper” சோதனை கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் Muhyiddin பரிந்துரைத்தார். இந்தச் சோதனையில் Bank Negara Malaysia போன்ற ஒழுங்குமுறை நிறுவனங்களின் கடுமையான வழிகாட்டுதல்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தபுங் ஹாஜியின் முதலீட்டுக் குழு வெளிப்புற உத்தரவுகள் அல்லது அரசியல் அழுத்தங்களின்றி சுயாதீனமாக செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். கடந்த காலத் தவறுகள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து, தபுங் ஹாஜி மீதான மக்களின் நம்பிக்கையை முழுமையாக மீட்டெடுக்க RCI பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் எனவும் Muhyiddin கேட்டுக்கொண்டார்.



