
Picture : Awani
SHAH ALAM, 25 ஆகஸ்ட் 2026: செலாங்கூர் மலேசிய விளையாட்டுப் போட்டியில் சிறந்த ஆண் வீரருக்கான விருதை வென்றுள்ள துப்பாக்கிச் சுடுதல் வீரர் Cheah Zen Hong, அந்த வெற்றியை நீண்ட நேரம் கொண்டாடாமல், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை பெறுவதை அடுத்த பெரிய இலக்காக நிர்ணயித்துள்ளார்.
20 வயதான Cheah Zen Hong, இந்த விருது தனது திறனை மேலும் உயர்த்துவதற்கான ஊக்கமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, தனது கடைசி மலேசிய விளையாட்டுப் போட்டியில் ஒன்பது தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றதுடன், இரண்டு புதிய போட்டிச் சாதனைகளையும் பதிவு செய்திருப்பது தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது தனது விளையாட்டு வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு என அவர் தெரிவித்தார். அந்த இலக்கை அடைவதற்கு தொடர்ந்து கடுமையாக உழைக்கப் போவதாகவும், எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் எதிர்த்து முன்னேறத் தயாராக இருப்பதாகவும் Cheah Zen Hong கூறினார்.
மலேசிய விளையாட்டுப் போட்டியில் தனது இளையோர் பிரிவு பயணம் முடிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இனிமேல் மூத்த வீரராக தனது திறனை நிரூபிப்பதில் அதிக கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார். மேலும், தேசிய உயர்நிலை வீரர் திட்டத்தில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை பெறுவது தனது அடுத்த இலக்குகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார். அதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக அனுபவத்தைப் பெற முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செக் ஸென் ஹொங் மலேசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் காற்றுத் துப்பாக்கி, 25 மீட்டர் விரைவு சுடுதல், 25 மீட்டர் விளையாட்டு துப்பாக்கி மற்றும் 50 மீட்டர் துப்பாக்கி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். கடந்த 2024ஆம் ஆண்டு சரவாக் மலேசிய விளையாட்டுப் போட்டியில் ஏழு தங்கப் பதக்கங்களை வென்றிருந்த அவர், தற்போது தனது சாதனையை ஒன்பது தங்கப் பதக்கங்களாக உயர்த்தியுள்ளார்.



