
Picture : Awani
கோலாலம்பூர், 18 செப்டம்பர் 2026: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தமக்கு விதிக்கப்பட்ட மீதமுள்ள சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அதன்படி, நஜிப் ரசாக் மீதமுள்ள தண்டனையை 23 ஆகஸ்ட் 2028 வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், இந்த நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு, 50 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை செலுத்துவதற்கு உட்பட்டதாகும். இந்த முடிவு, கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயாவுக்கான மன்னிப்பு வாரியத்தின் 64ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
வீட்டுக் காவலில் இருக்கும் காலத்தில் நஜிப் ரசாக் குறிப்பிட்ட நிபந்தனைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை அவர் மீறினால், நிபந்தனையுடன் வழங்கப்பட்ட மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, மீதமுள்ள தண்டனையை உடனடியாக சிறையில் தொடர வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 11 செப்டம்பர் நடைபெற்ற மன்னிப்பு வாரியத்தின் 63ஆவது கூட்டத்தில் நஜிப் ரசாக்கின் மன்னிப்பு கோரிக்கை அடுத்த கூட்டத்தில் பரிசீலிக்க ஒத்திவைக்கப்பட்டது.
2024 ஜனவரி 29ஆம் தேதி நடைபெற்ற மன்னிப்பு வாரியக் கூட்டத்தில், SRC International நிறுவனத்துடன் தொடர்புடைய வழக்கில் நஜிப் ரசாக்கின் சிறைத்தண்டனை 12 ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. அதேவேளை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் 50 மில்லியன் ரிங்கிட் ஆகக் குறைக்கப்பட்டது. நஜிப் ரசாக் 23 ஆகஸ்ட் 2022 முதல் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.



