
Picture : Awani
புத்ராஜெயா, 18 செப்டம்பர் 2026: முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எந்த வகையிலும் பாதிக்காது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். நஜிப் தொடர்பான வழக்குகள் உட்பட தற்போது நிலுவையில் உள்ள அனைத்து ஊழல் வழக்குகளும் சட்ட நடைமுறைகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தாம் பிரதமராக, சட்டத்தின் தாக்கம், நாட்டின் நிலைத்தன்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பான கொள்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதே தமது பொறுப்பு என்று அன்வார் தெரிவித்தார். அதேவேளை, சட்டத்துறை தலைமை அதிகாரியின் விரிவான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களும் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். எனினும், கூட்டாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை அனைவரும் மதிக்க வேண்டும் என்றும், மாமன்னரின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.
நாட்டில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் போன்ற செயல்கள் எவராலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். எந்தவொரு தலைவர் அல்லது தனிநபரும் தமது பதவி அல்லது அதிகாரத்தை பயன்படுத்தி தனிப்பட்ட செல்வத்தை பெருக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவசியம் என்று குறிப்பிட்ட அன்வார், நாட்டின் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
வீட்டுக் காவல் நடைமுறைக்கான தெளிவான செயல்பாட்டு விதிமுறைகள் குறித்து கேட்கப்பட்டபோது, அது உள்துறை அமைச்சின் அதிகார வரம்புக்குள் வருவதாக அன்வார் தெரிவித்தார். மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இன்று நஜிப் ரசாக்கிற்கு நிபந்தனையுடன் மன்னிப்பு வழங்கி, மீதமுள்ள தண்டனையை 2028 ஆகஸ்ட் 23 வரை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்துள்ளார்.



